Thursday, February 23, 2017

சிவலோக பதவி

நாளை சிவராத்திரி சிவன் அருள் பெற எனது அனுபவத்தில் உணர்ந்த ஒன்றை சொல்கிறேன்.

ஆன்மீகத்தில் மூன்று விஷயங்கள் கடைபிடிக்க சொல்வார்கள்  பசித்திரு, தனித்திரு விழித்திரு பசியுடன் இருக்க வேண்டும் எதுவும் சாப்பிடாமல், தனிமையில் அமைதியாக இருக்க வேண்டும் இறைவனை மட்டுமே நினைத்து கொண்டு அடுத்து விழிப்புடன் இருக்க வேண்டும் நமக்கு என்ன நடக்கிறது என்பதையும் கவனித்து கொண்டே இருக்க வேண்டும் இந்த மூன்றையும் கடை பிடிங்க கட்டாயம் இதை கடைபிடிப்பதால் நமக்கு கிடைக்க போவது

பசித்திரு, தனித்திரு விழித்திரு இந்த வார்த்தைகளின் முதல் எழுத்துகளை மட்டும் எடுத்து போட்டு பாருங்கள் ப த வி, பதவி சிவலோக பதவி கிடைக்க முயற்சி செய்வோம்.

நாளைய இரவு நம்மை கடந்து போவது அந்த ஈசனாக கூட இருக்கலாம்.

நற்றுணையாவது நமசிவாயவே

Monday, February 20, 2017

சித்தர்களின் தலைவன் முருக பெருமான்

சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் நம் முருக பெருமானை பற்றிய வித்தியாசமான ஆய்வு.
வாசித்து பாருங்கள் ...வியந்தே போவீர்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு.

வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூத உடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

’சரம்’ என்றால் மூச்சு.
’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது முருக பெருமானின் தத்துவம்.

சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது;
சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக் கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி.

அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்; இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.அகத்தியர், போகர், ஔவையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெரு வாழ்வு எய்திய மகான்கள்.

உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலுமே இல்லை.

முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்".

தமிழ் கடவுள் முருகன் என்கிறாய். ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானமே போதாது.

இருப்பினும் அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில் பார்ப்போம் .அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும்.

மகான் ஸ்ரீமத்சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.

"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்.பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்.சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு.

நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம்.

இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பிணைந்து உள்ளன. அந்த மையமே சுழு முனை என்பது ஆகும். இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன.

இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்
1.நெற்றி (பிரம்மந்திரா)
2.தொண்டைக் குழி (ஆங்ஞை)
3.மார்புக்குழி (விசுத்தி)
4.தொப்புள் குழி (மணிப்புரம்)
5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)
6.மலக்குழி (மூலாதாரம்)இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இணைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும்.

இந்த சுழுமுனை புருவ முடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது. இந்த தலைப் பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும் அழைப்பர். மருத்துவர்களின் லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால் இது எளிதாக புரியும்.

முருகன் கையிலுள்ள வேலும் இந்த சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது.

மருத்துவர்களின் லோகோவில் இடது புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பிணைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை.

இதைத்தான் கந்தகுரு கவசத்தில் ஸ்ரீமத்சத்குரு சாந்தானந்த சுவாமிகள் சொல்லுகிறார்.

"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்".

எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம்.

குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழுமுனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான். ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன் உள்ளான். இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்.

"உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவான் தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி எங்கும்  தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்".

சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று.இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என எண்ண வேண்டாம்.

ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும்,வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே.

ஆனால், மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.

இறுதியாக ஒன்று கடவுள் ஒருவரே.அவர் எவராலும் பெறப் படவும் இல்லை. அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை. எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர வேறொன்றும் இல்லை.

முருகன் என்பது மனிதன் இல்லை சத்தம் ஓசை சிவன் படைப்புக்களை சத்தமாகி முருகன் ஊடாகவே உருவாக்குகிறான்.
உருவாக்கி கொண்டு இருக்கிறான்.
அதனாலே ஓசையான சத்ததின் ஊடாக உருவாகும் தமிழ் மொழிக்கு கடவுள் முருகன் என்றார் .

எமது உடலில் இதயத்தில் சத்தம் கேட்டுக் கொண்டு இருக்கிறது.அது சத்தம்.ஓசை. முருகன்.

அந்த சத்தம் எமது இதயத்தில் இல்லை என்றால் உயிர் இறந்து விட்டது.உயிர் இருந்தால்தான் படைப்பு உருவாகும் .ஒரு மொழிக்கு ஓசை கொடுப்பதை என்றால் உலக அறிவான தகவல்களை ஆவணப்படுத்த வேண்டும்.

எனவே ஆவணப் படுத்தாத அறிவான தகவல் மனித ஆயுளுடன் முடிந்து போகும். எனவே என்னதான் ஓசை படைப்பாக இருந்தாலும் அதை ஆவணப்படுத்தாவிடில் வெறும் ஓசையாக அதன் அர்த்தம் கருத்து தெரியாத வெறும் ஓசையாகவே நாம் உணர்வோம்.

எனவே ஆவணப் படுத்தும் எழுத்து வடிவத்தை பிள்ளையார் என்று அழைத்தனர் அகத்தியர் போன்ற மகான்கள். சிவன் அணுத் துகள் atom , என்பதை உணர்ந்த அகத்தியர் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் சிவனை சிவசக்தியான சிவலிங்கத்தை வழிப்பட சிவ பக்தர்கள். முதல் தமிழ் சங்க தமிழ் மொழி ஓசை ஊடக உருவாக்கபட்டமையால் 'ஓசை' யை முருகன் என்றனர்.

நடராசர் கையில் உள்ள உடுக்கு ஓசையை குறிக்கிறது. முருகனிடம் உள்ள வேல் மனித மூளைக்குள் இருக்கு செவ்வேல் குறிக்கும். அதாவது pinnal இதில் இருந்துதான் மெலட்னோன் என்ற சுரப்பு இரவு சுரந்து உடலை சம நிலை சீர் செய்கிறது. இதை மூன்றாம் கண் என்றும் சொல்வார்கள்.

இதனாலேதான் சிவனின் மூன்றாம் கண்ணில் இருந்து முருகன் தோன்றினார்கள் என்றும் சொல்கிறார்கள்.சிவன் மனித உடலில் தலையில் உருவாக்கி இருப்பதுதான் செவ்வேல். இதை முருகனுக்கு சூரனை அழிக்க சக்தி கொடுத்தார் என்பதன் பொருள் அறியாமை எனும் இருளில் மனிதன் மிருகங்கள் போன்று வாழாமல் மனித மூளையில் உள்ள செவ்வேலை பயன் படுத்தி அறியாமை என்ற சூரனை வதம் செய்து அறிவுடன் வாழச் சொல்லும் வீர வரலாறு.

விந்து கட்டுதல் என்றொரு பயிற்சி நிலை யோகத்தின்கண் உள்ளதுதான் என்ற உண்மையும், அது சாதாரண அற்ப மக்களுக்கு சொல்லப்பட்டதல்ல என்றும் உணர்வதுடன் அதன் தன்மையையும் உணர்ந்திடலாம்.

ஞானம் பெறுதலின் ஒரு படி நிலையே விந்து கட்டுதலாகும் என்றும் அதுவே முடிவானது அல்ல என்றும் அதை மூன்றாம் படி நிலையாகிய யோக நிலைதனை ஆறுமுகனார் அருளினால் பெற்றிட்ட யோகிகளால்தான் செய்திட இயலும் என்றும் அறியலாம்.

பெண்பாலிலுள்ள சுரோணிதமும், ஆண்பாலிலுள்ள சுக்கிலமும் சேர்ந்து கருத்தரித்து உடம்பும் உயிரும் உண்டாகிறது.

தந்தையிடமிருந்து உயிரும் தாயிடமிருந்து உடம்பும் தோன்றினாலும் தோன்றிய அந்த உடம்பும் உயிரும், நூறு ஆண்டுகள் வரை நட்புடன் இருந்து உடம்பும் உயிரும் பிரியாமல் நட்போடு வாழ்ந்தாலும் ஒரு காலத்தில் எப்படியாவது உடம்பை விட்டு உயிர் பிரிந்து போய் விடுகிறது. இதுவே இயற்கையின் நியதியாகும்.

பரு தேகமான ஆணும், பெண்ணும் கூடினால், உயிரும் பிரிந்துப் போகக் கூடிய பரு உடம்பும் உண்டாகிறது. ஆனால் சூட்சும தேகத்தை உண்டாக்கவல்ல இடது கலையாகிய பெண்ணும், வலது கலையாகிய ஆணும் சேர்ந்தால் சூட்சும தேகம் உண்டாகும்.

ஆனால் இடது கலையும் வலது கலையும் ஒருபோதும் சாதாரணமாக ஒன்று சேராது. ஆனால் ஒன்று சேராத இடது கலையையும் வலது கலையாகிய சூரிய கலையையும் சுழிமுனையாகிய புருவ மத்தியில் ஒன்று சேர்த்தால் அழிகின்ற பரு உடம்பும் அழியாது,

அழியாத சூட்சும தேகமும் தோன்றும், உயிரும் தோன்றி எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் கலந்து என்றும் அழிவற்ற மரணமிலாப் பெரு வாழ்வைப் பெற்று மாறாத இளமை கொண்ட ஒளிதேகமாக மாறி விடும்.

இந்த மாபெரும் இரகசியத்தை முதலில் அறிந்த முதுபெரும் தலைவனே நம் முருகப்பெருமான்தான்.

தான் பெற்ற அந்த பேரின்பத்தை தனது சீடனான அகத்திய பெருமானைச் சார்ந்து சேராத இடது வலது கலைகளை சுழிமுனையில் ஒடுக்கி சேர்ந்திடச் செய்து அகத்தியம் பெருமானையும் மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்தார் என்பதையும் நாம் உணர்ந்து அறியலாம்.

மனிதனே இறைவன்.
செயலிலால் இறைவன் ஆகிறான்.

Sunday, February 19, 2017

பிடி சாம்பல் கூட நிரந்தரம் இல்லை

இன்பமும் நிலையில்லை துன்பமும் நிலையில்லை என்றுமே நிலையானது அப்பன் சுடுகாட்டில் சுடலை பொடி பூசி ஆடும் அந்த பரம்பொருள் ஈசன் மட்டுமே என்பதை உணர்ந்து தெளிந்து விடு மனமே

நம் வாழ்வின் முடிவில் நாம் இறந்து இந்த உடலை எரித்த பின்பு நமது பிடி சாம்பல் கூட இந்த உலகில் நிலைப்பது இல்லை என்பதை உணர்ந்து தெளிந்து விடு மனமே

நாம் வாழும் வாழ்விலும் நம் வாழ்க்கைக்கு பின்பும் நமக்கு துணையாவது நமசிவாயவே என்பதை உணர்ந்து அப்பன் சிவனின் திருவடிகளை சிக்கென பிடித்து விடு மனமே

Friday, February 3, 2017

தெய்வீகம் காத்த தேவர்திருமகனார்


தெய்வீகம் காத்த தேவர் அய்யா






மதுரைதமிழ்சங்க பொன்விழா 1956 ஜூன் மாதம் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் வடக்காடி வீதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்

3 ஆம் நாள் விழாவில் சேலத்தை சேர்ந்த பள்ளியாசிரியர் ஒருவரின் 10 வயதுமகள் மணிமேகலை எனும் குழந்தை மனப்பாடமாக 10 நிமிடங்கள் தொடர்ந்து சொற்பொழிவாற்றுகிறது.

அன்றைய விழாவின் தலைமைப் பொறுப்பை வகித்த நீதிக்கட்சி பிரமுகர் பி.டி.ராஜன் தனது உரையாற்றும் வாய்ப்பை அண்ணாதுரைக்கு அளிக்க...

கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அண்ணாதுரை

"இந்த குழந்தைக்கும் உமையவள் தான் முலைப்பால் கொடுத்தாளா?" எனும் தொனியில் ஏகடியம் பேசி

ஒரே நேரத்தில் பராசக்தியையும் ,

உமையவள் கரங்களால் ஞானப்பால் ஊட்டப்பெற்ற திருஞானசம்பந்தரையும் இழிவுபடுத்திய அவலம் நடந்தது.

இதைக்கேள்விப்பட்ட தேவர்திருமகன்
அங்கையற்கண்ணி ஆலயத்திலேயே

புகுந்து தெய்வத்தையே அவமானமாக பேசியவனை சும்மாவா விட்டீர்கள் என
இந்த செய்தி சொன்னவர்களை கடிந்து கொண்டு

சேதுபதிகளின் தமிழ்த்தொண்டு எனும் தலைப்பில் 5 ஆம் நாளில் பேச இருந்த தேவர்திருமகன்

4 ஆம் நாளே மேடையேறி

" அடியேன் வலுக்காட்டயமாக அதுவும் ஒரு பெண் தலைமையேற்றிருக்கும் போது மேடையை அபகரிப்பது இதுவே முதலும் கடைசியுமாகும் .

இங்கே நேற்று வேறொருவரின் உரையாற்றும் சந்தர்ப்பத்தை அபகரித்து

என் தாய் அங்கயற்கண்ணியை அவள் ஆலயத்தில் வைத்தே அவளை அவமானப்படுத்தி பேசிய அவலம் நடந்நேறி இருக்கிறது.

இனி ஒரு நாள் கூட
இந்தவிழா இங்கே நடைபெறக்கூடாது.இந்த மேடை இன்றே பிரிக்கப்பட்டு தமுக்கம் மைதானம் கொண்டு செல்லப்பட வேண்டும்.

அதே போல அன்னை உமையவளை இழிவு படுத்தி பேசிய நபர் ஆண்மகனாக இருந்தால் இனியொரு முறை மதுரை வந்து இது போல் பேசிவிட்டு உயிரோடு திரும்பிச் செல்லட்டும் ...பார்க்கலாம்.

என ஆவேசமாக பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்கி வேகமாக இறங்கி சென்றார்.
தெய்வீகம் காத்த பசும்பொன் அய்யா

அப்பொழுதே அந்த மேடை பிரிக்கப்பட்டு தமுக்கம் மைதானம் சென்றது.

தேவர் திருமகன் உயிரோடு இருக்கும் வரை அண்ணாதுரை மதுரை வரவே இல்லை.

1963 ஆம் ஆண்டு ஐயா இறந்தபின் தான் பசும்பொன்னில் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

தெய்வத்தை நிந்தித்தாலும், தெய்வீகத்திருமகன் வாயில் விழுந்த்தாலும் தொண்டையில் புற்று நோயால் #அண்ணாதுரைக்கு மரணம் ஏற்பட்டது.

தேவர் அய்யா இருந்த வரையில் இந்த தேசத்தையும் தெய்வத்தையும் பேச ஒரு பயலுக்கும் தைரியம் வரவில்லை :)

இப்போ சீமான் வீரமனி பேச்சை எல்லாம் கேட்க வேண்டியிருக்கு :(

வேண்டதக்கது அறியோய் நீ !



பக்தி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்.



நம் மாணிக்க வாசக பெருமானை பாருங்கள் ஈசனே அவரிடம் என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு நம் மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள்.

வேண்டதக்கது அறியோய் நீ ! 
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்,
அதுவும் உந்தன் விருப்பன்றே!

எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும். எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும். எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் ஈசனிடம் உருகி பாடுகிறார்.

ஆனாலும் சிவ பெருமான் நம் மணிவாசக பெருமானை விடுவதாக இல்லை மீண்டும் கேட்கிறார் உனக்கு என்ன வேண்டும் கேள் என்று மீண்டும் மணிவாசகர் பாடுகிறார் பாருங்கள்.

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

சொந்தங்கள் எனக்கு வேண்டாம், ஊர் வேண்டாம், நல்ல பெயர் வேண்டாம், நல்ல படிப்பு அறிவு வேண்டாம் உன் அருள் இருந்தால் அது தானாக கிடைக்கும். குற்றாலத்தில் அமர்ந்து இருக்கும் ஆனந்த கூத்தனே நான் உன் திருவடிகளை தேடி தாயை கண்ட கன்று போல அன்பில் உருக வேண்டும்.


பக்தனைப் போல, ஒரு கன்றை ஈன்ற பசுவின் மனம் போல உருக வேண்டுவனே என்கிறார்.

யோசிக்கவாவது முடிகிறதா நமக்கு ? இருக்கிறதை வேண்டாம் என்று சொல்ல எப்படி பட்ட மனம் வேண்டும் ?

அப்படிப் பட்டவர்கள் வாழ்ந்த ஊரில் நாமும் வாழ்கிறோம்.
அவர்கள் எழுதியதை நாம் படிக்கிறோம்.
நாம் தான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் ?

Wednesday, February 1, 2017

கங்கை கொண்ட சோழ புரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்பாள்

நாளை(02.02.2017) குடமுழுக்கு கானும் கங்கை கொண்ட சோழ புரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்பாள் திருக்கோயில்.







தலபெருமை:

பெரிய லிங்கம்:

தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. தஞ்சை பெரிய கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர். ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள லிங்கம் பெண் அம்சமாகும். அங்கு உரல் வடிவம். இங்கு உடுக்கை வடிவம்.

தினமும் சூரிய தரிசனம் :

இங்குள்ள நந்தியும் தஞ்சாவூரை விட பெரியது. தஞ்சாவூரில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டு உயரமான மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. தஞ்சாவூரில் மூலஸ்தானத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் நந்தி உள்ளது. இங்கு 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள்.

சந்திரகாந்த கல் :
கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்ன வென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். இந்த அனுபவத்தை பல தலைமுறைகளாக இருந்து வரும் குருக்குள் தங்கள் சந்ததியினருக்கு கூறி வருகிறார்கள். இந்த வகை கல் வேறு எந்தக் கோயிலிலும் இருப்பதாக தெரியவில்லை.

அன்னாபிஷேகம் :
காஞ்சிமடத்தின் சார்பில், ஐப்பசி பவுர்ணமி தினத்தில் இங்கு பல வருடங்களாக மிகவும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான மூடை அரிசியை வேகவைத்து மூலவராக இருக்கும் பிரமாண்டமான லிங்கம் மூடும் அளவிற்கு சாதத்தினால் அபிஷேகம் செய்வார்கள். அன்றைய தினம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த அபிஷேகம் நடக்கும். அத்துடன் காய்கறி, கனி வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, சிறப்பு பூஜை நடக்கும். மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை பக்தர்கள் அன்னாபிஷேக லிங்கத்தை தரிசிப்பார்கள்.
அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பொதுவாக ஓடும் நீரில் விடுவது வழக்கம். குறிப்பாக பாணத்தின் மீது இருக்கும் அன்னத்தில் கதிர்கள் ஊடுருவி இருக்கும். அதை சாப்பிட்டால் அதன் சக்தியை தாங்கும் வலிமை நமக்கு கிடையாது. எனவே ஆவுடைப்பகுதியில் உள்ள அன்னத்தில், தயிர் கலந்து தயிர் சாதமாக பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதைச் சாப்பிடுகிறார்கள்.

பெரிய நாயகி :
பெயருக்கேற்றாற் போல் 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அம்மன் அருள்பாலிக்கிறாள். நிமிர்ந்து பார்த்து தான் வணங்க வேண்டும். இவளது பாதத்தில் காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்துள்ளார். அதன் பிறகு தான் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வர ஆரம்பித்தனர் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

சுற்றமுடியாத நவக்கிரக மண்டபம் :
இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய யந்திர வடிவில் 8 கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு, 7 குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரியன் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்கள் இந்த உலகை சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களை சுற்றமுடியாத படி மண்டப அமைப்பு உள்ளது.

குழந்தை வடிவில் துர்க்கை :
இங்குள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் ராஜேந்திர சோழனின் குலதெய்வம். 9 வயது சிறுமியின் வடிவில் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அபூர்வம். இவளை “மங்கள சண்டி’ என்று அழைக்கிறார்கள். திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக இவளை வணங்குகின்றனர். பதவி உயர்வுக்காகவும், பணியிட மாற்றத்திற்காகவும் அர்ச்சனை நடக்கிறது. ராஜேந்திர சோழன் கோயிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர் தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். இவளுக்கு கோயிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது.

கணக்கு விநாயகர் :
ஒருமுறை ராஜேந்திர சோழன் தன் அமைச்சரை அழைத்து “பெரிய கோயில் கட்டியதற்கு இது வரை எவ்வளவு செலவாகி உள்ளது?’ என கேட்டான். அமைச்சருக்கு சரியாக சொல்ல தெரியவில்லை. அவர் பதறிப்போய் அங்கிருந்த விநாயகரை வணங்கினார். “காவிக்கல் 8 ஆயிரம் செம்புகாசு, காவிநூல் 8 ஆயிரம் செம்பு காசு’ என நினைவு வந்தது. எனவே “கணக்கு விநாயகர்’ என்று அழைக்கப்பட்டார். தற்போது “கனக விநாயகர்’ எனப்படுகிறார். இவர் தன் வலக்கையில் எழுத்தாணியுடன் உள்ளார்.

கோபுர அமைப்பு:
இங்குள்ள கோபுரம் சோழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தஞ்சாவூரைப் போலவே இங்கும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பின் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. 216 அடி உயரமுள்ள தஞ்சாவூர் கோபுரம் கீழிருந்து மேல் ஒரே சீராக கட்டப்பட்டிருக்கும். ஆனால் 180 அடி உயரம், 100 அடி அகலமுள்ள இக்கோயில் கோபுரம், கீழிருந்து 100 அடி உயரம் வரை அகலமாகவும், அதன் பின் 80 அடி உயரம் குறுகலாகவும் கட்டப்பட்டுள்ளது. கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அடுத்தபடியாக இக்கோயில் விமானம் தான் தமிழகத்தில் பெரிய விமானம் ஆகும்.

தல வரலாறு:
தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012- 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு “கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் கிடைத்தது.
தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான். தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் “கங்கை கொண்ட சோழபுரம்’ ஆனது.
கும்பாபிஷேக நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தான். கோயிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்து கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வான்.
இக்கோயில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. இங்குள்ள லிங்கம் தமிழகத்தின் மிகப்பெரிய லிங்கம் ஆகும். இவருக்கு உடுத்துவதற்கு தனியாக வேட்டி, துண்டு நெய்யப்படும். இங்குள்ள சண்டிகேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும்.
விஞ்ஞானம் அடிப்படையில்: இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இங்கு மூலஸ்தானத்திலிருந்து 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும்