Sunday, November 12, 2017

கடவுளுக்கு உருவம் உண்டா?

சிலைகளைக் கும்பிடுவது
சரியா? என்ற முஸ்லிம் அன்பரின் கேள்விக்கு ரமணமஹரிஷி  பதில்

ஒரு நாள் இரண்டு முஸ்லீம் அன்பர்கள் அவரை நாடி வந்தனர். அவர்களுக்கு உருவ வழிபாடு பற்றி சந்தேகம் இருந்தது.

பக்தர்: கடவுளுக்கு உருவம் உண்டா?

மஹரிஷி: அப்படி என்று யார் சொன்னது?

பக்தர்: அப்படி என்றால், கடவுளுக்கு உருவம் இல்லை என்றால், சிலைகளைக் கும்பிடுவது சரியா?

மஹரிஷி: கடவுளை விட்டு விடுவோம். ஏனென்றால் அவர் யாருக்கும் பிடிபடாதவர். உங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு உருவம் உண்டா?

பக்தர்: ஆம், எனக்கு உருவம் உண்டு; பெயர் உண்டு.

மஹரிஷி: அப்படி என்றால் உடல் அங்கங்களைக் கொண்ட ஒரு மனிதர் நீங்கள். ஆறடி உயரம், தாடி கொண்டவர். சரி தானே!

பக்தர்: நிச்சயமாக அப்படித்தான்!

மஹரிஷி: சரி, அப்படியானால் தூங்கும் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா?

பக்தர்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது தெரிகிறது. ஆகவே, அநுமானத்தின் மூலமாக நான் இப்படி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறேன் என்பது தெரிய வருகிறது.

மஹரிஷி: நீங்கள் உடல் தான் என்றால் இறந்த பிறகு சவத்தை ஏன் புதைக்க வேண்டும்? உடல் தன்னைப் புதைப்பதை எதிர்க்க அல்லவா வேண்டும்?

பக்தர்: இல்லை, நான் பரு உடலில் உள்ளே இருக்கின்ற உள்ளுறை ஜீவன்.

மஹரிஷி: ஓ! அப்படி என்றால் உண்மையிலேயே நீங்கள் உருவம் இல்லாதவர் என்றாகிறது. ஆனால் இப்போது உடல் மூலமாக உங்களை அடையாளம் கண்டு சொல்கிறீர்கள். இப்படி உடலுடன் இருக்கும் போது அடையாளம் காணும் நீங்கள், உருவம் இல்லாத கடவுளை உருவமாகக் காண்பதில் என்ன தவறு இருக்கிறது?

கேள்வி கேட்டவர் திகைத்து விட்டார்.

Thursday, November 2, 2017

பசும்பொன் தேவர் அய்யா

திருநீறு பூசிய சைவசமய காவலர் தேவர் பெருமகனார்...!!!

தேவர் பெருமகனார் வாழ்ந்தகாலத்தில் தமிழகத்தில் திராவிடமும், நாத்திகமும் போயாட்டம் ஆடியது. பாரம்பர்ய சைவக் குடும்பங்களே திருநீறு இடாமல் தனிதமிழ் இயக்க மாயையில் சிக்கித் தவித்தனர்.

ஆனால்  தேவர் திருமகனார் நெற்றி நிறைய திருநீறோடு தமிழகத்தை வலம் வந்தார்.

ஒரு முறை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்காடி வீதியில் மதுரை தமிழ்ச்சங்க பொன்விழா நடந்து. இச்சங்க தலைவராக இருந்த திரு பி.டி. ராஜன் அவர்கள், தாம் பேசவேண்டிய நான்காம் நாளில் தமக்கு பதிலாக அண்ணாவை பேசஅழைத்தார்.

அன்றைய விழாவில், மணிமேகலை என்ற சிறு குழந்தை அழகாக பேசி பரிசு பெற்றது.

இதற்க்கு பின் பேசிய அண்ணா, இந்த குழந்தை அருமையாக பேசினாள். அந்த காலமாக இருந்தால், ஞானப்பால் உண்டார் -ஞானம் பெற்றார் என்று கதைக் கட்டி இருப்பார்கள் என்று ஞானசம்பந்தரை  கிண்டல் செய்து பேசினார்.

இதனை கேள்விப்பட்ட தேவர் வெகுண்டு எழுந்தார். அன்னை மீனாட்சி கோயில் திருவீதியில் நாத்திகப் பேச்சா? அதுவும் சம்பந்தரை கிண்டல் செய்து? 

இது மதுரை தமிழ்சங்கமா அல்லது  நாத்திக சங்கமா?

தமிழ் ஞானசம்பந்தன் என்று வரிக்கு வரி உரைத்த சம்பந்தரை தமிழ்சங்கம் என்று பெயர் வைத்தோர் கௌரவப்படுத்தும் விதம் இதுதானா? என்று இடியென முழங்கினார்.

இதனை கேள்வியுற்ற மதுரை தமிழ்ச்சங்கத்தார் நடுநடுங்கினர்.

6ம் நாள் பேசவேண்டிய தேவர், அண்ணா பேசிய மறுநாள் அதாவது 5ம் நாளே மேடையேறி, அன்னை மீனாட்சி ஆலய வீதியில் அவளின் தவக்குழந்தையை அவதூறாக பேசும் தைர்யம் எப்படி வந்தது. சம்பந்தர் வரலாறை கட்டுக்கதை என்று கோயிலில்  பேசலாமா? இவ்வாறு அருளாளர்களை விமர்ச்சிக்கும் தமிழ்சங்க விழாவை இனி கோயிலில் நடத்த அனுமதிக்கமுடியாது. தமிழ்சங்கம் என்ற பெயரில் நாத்தீகம் பேசுவீற்களோ என்று இடியயென முழங்கினார்.
வெகுண்டெழுந்தார்.

திருநீற்றுப் பதிகம் அருளிய மண்ணில் திருநீறு பூசிய தேவர்பெருமகனார்.

வேறுவழியின்றி தமிழ்சங்கத்தார் மறுநாளில் இருந்து விழாவை தமுக்கம் மைதானத்திற்க்கு மாற்றினார்கள்.

சம்பந்தபெருமானை ஒருவார்த்தை கூறியதற்க்காக வெகுண்டு எழுந்தார் தேவர்.

ஆனால் இன்று திருமுறைகளை மதிப்பதாக கூறிக்கொண்டு உடம்பெல்லாம் ருத்திராட்சம் தரித்துக்கொண்டு, தமிழின் பெயரில் நாத்திகவாதிகளோடும், கம்யூனிசவாதிகளோடும் மேடையில் பங்குபோட்டுக்கொண்டு பெயர் புகழுக்காக அலைபவர்களும் உள்ளனர். இதில் சம்பந்தர் ஆரியர் என்ற சொல்லாடல்  வேறு.

இன்று தேவர் திருமகனார் போன்ற ஆன்மீகமும்  வீரமும் ஒருங்கே அமையப்பெற்ற தலைவர்  இல்லாமையல் வந்த வினைகள் இவை.